சிறிலங்காவுக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க சீனா இணக்கம்
சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மேலும் நிதியுதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய திட்டங்களின் மூலம், சிறிலங்காவுக்கு நிதியுதவிகளை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக, நி்தியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட நிதியமைச்சு வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு, வினவிய போது, அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
எனினும், சிறிலங்காவுக்கு உதவ சீனா எப்போதும் தயாராகவே உள்ளது என்று சீன தூதரக, அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ சொங், தெரிவித்துள்ளார்.
அனைத்து நிதியுதவிகளும், சிறிலங்காவினால் கோரப்பட வேண்டும், சீனாவால் முன்மொழியப்படுவதில்லை, சிறிலங்காவில் எந்தவொரு திட்டத்தையும், சிறிலங்கா அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சிறிலங்கா நிதியமைச்சருக்கும் சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகளுக்கும இடையில் கடந்தவாரம் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. சீனாவிடம் இருந்து நிதியுதவியைப் பெறுவது குறித்தே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.
இதைவிட, பண்டா பிணைமுறிகள் மூலமாக சீனாவிடம் 500 மில்லியன் டொலர் நிதியுதவியை பெறுவதற்கான பேச்சுக்கள் நடத்தப்படுவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.