அரச வங்கிகள் மீண்டும் கிரியெல்லவிடம் – சிறிலங்கா அதிபர் இணக்கம்
அரசாங்க வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் பொறுப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட அரசிதழில், அரசாங்க வங்கிகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
முன்னர் அரசாங்க வங்கிகளை தன் பொறுப்பில் வைத்திருந்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனால் அதிருப்தி அடைந்திருந்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பழிவாங்கும் வகையில் செயற்படுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்ததுடன், மீண்டும் அரச வங்கிகளை லக்ஸ்மன் கிரியெல்லவின் அமைச்சின் கீழ் கொண்டு வரவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.