சிறிலங்கா அதிபருக்கு ஒருவாரம் முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து – சீன அதிபரின் அதிரடி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைக் கொடுத்தனுப்பியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்.
இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நேரில் சென்று கையளித்துள்ளார்.
அதில், எமது இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கு நான் மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறேன், சீன-சிறிலங்கா மூலோபாய ஒத்துழைப்பு கூட்டை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு உங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன் என்று சீன அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சீன அதிபரின் வாழ்த்துக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து சிறிலங்கா அதிபரும் அன்றே பதில் கடிதம் ஒன்றையும் கொடுத்தனுப்பியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று சிறிலங்கா அதிபரும் கூறியுள்ளார்.