கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்
பாகிஸ்தானின் கடல்சார் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான, பிஎம்.எஸ்எஸ் காஷ்மீர், நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்திய கட்டளை அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளும், பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜாட் அலி உள்ளிட்ட பாகிஸ்தான் இராஜதந்திரிகளும் கொழும்பு துறைமுகத்தில் பிஎம்.எஸ்எஸ் காஷ்மீர் போர்க்கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
95 மீற்றர் நீளமான பிஎம்.எஸ்எஸ் காஷ்மீர், போர்க்கப்பலில், 74 மாலுமிகளும் அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்போது, பாகிஸ்தான் கப்பலில் உள்ள மாலுமிகள் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
நாளை மறுநாள் பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.