மேலும்

வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

“வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவினால், வட மாகாண அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், அமைச்சர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.  இதனால், மாகாண அமைச்சரவை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை நிறைவேற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகி, புதிய அமைச்சர்களை நியமிக்க வழி செய்வது தான், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த வழிமுறையாகும்.

அரசியலமைப்பின் 154 (ஈ) பிரிவின் கீழ், முதலமைச்சரே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். ஆளுனர் என்ற வகையில் எனக்கு அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரம் இல்லை.

எனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனிமேலும் தாமதிக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *