சோனியா, மன்மோகன், ராஜ்நாத் சிங்குடன் ரணில் பேச்சு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா பிரதமர் தங்கியிருந்த புதுடெல்லி தாஜ் பலஸ் விடுதியில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் சோனியா காந்தியுடன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்.
சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், பிராந்திய அரசியல், சமூக மாற்றங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நேற்று பிற்பகல் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் இரண்டு தரப்புகளிலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.