அமைச்சுக்கள் தொடர்பில் இணக்கமில்லை – அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைப்பு
சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறிகள் காணப்படுவதால் அமைச்சரவை மாற்றம் மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்க்ள இடம்பெறலாம் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல தடவைகள் செய்திகள் வெளியான போதும், இதுவரையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறவிருந்த அமைச்சரவை மாற்றமும், பிற்போடப்பட்டுள்ளது.
வெளிவிவகார, ஊடகத்துறை, உயர்கல்வி, நிதி, விவசாயம், மற்றும் துறைமுகங்கள் அமைச்சர்களின் நியமனங்கள் தொடர்பாகவே இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.