கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கைப்பற்ற இந்தியா வியூகம்
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்திய கொள்கலன் கூட்டுத்தாபனம், கூட்டு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்தக் கூட்டு அமைப்பில், ஏபிஎம் முனையங்கள், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மரெஸ்க் லைன் ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தின் பெறுமதி சுமார் 550 தொடக்கம் 600 மில்லியன் டொலராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொழும்புத் துறைமுகத்தில் இந்திய-சிறிலங்கா உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கு, கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா உள்ளாகியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதிப்பீட்டுப் பணிகள் முடிந்ததும், இந்த திட்டத்துக்கான கேள்விப்பத்திரங்கள், ஒக்ரோபர் மாதம் கோரப்படும் என்று சிறிலங்கா துறைமுக அதிகாரசபைத் தலைவர் தம்மிக ரணதுங்க முன்னர் தெரிவித்திருந்தார்.
2008ஆம் ஆண்டு கொழும்பு தெற்கு துறைமுகம் பாரிய கப்பல்கள் தரித்திருக்கும் வகையில், ஆழமாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட போது நான்கு புதிய கொள்கலன் முனையங்களை அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இவை ஒவ்வொன்றும் 2.4 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்கமைய முதலாவது கொள்கலன் முனையத்தை அமைக்கும் திட்டம், சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு 2012ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
இந்த முனையம் 2015ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையம் என்ற பெயரில் முழுமையாக இயங்கி வருகிறது.
இந்த நிலையிலேயே, கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை கைப்பற்ற இந்திய அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகிறது.
இதற்கென இந்தியாவின் முக்கிய தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து புதிய கூட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.