மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரையாம்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரணியின் போது கூறப்பட்ட கருத்துக்கள், சிறிலங்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவோ அல்லது அதை ஊக்குவிப்பதாகவோ இருந்ததாக “கூட்டு எதிர்க்கட்சி” என்றழைக்கப்படும் சிவில் சமூக உறுப்பினர்கள் குழுவால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் எவ். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் கூறப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து, எதிர்க்கட்சியினர் கவலைகளை எழுப்பியிருந்தனர்.
