எவ்பிஐயின் தீர்மானத்தை நிராகரிக்கிறது கத்தோலிக்க திருச்சபை
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு, சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாக செயற்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) எடுத்தத முடிவை சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு தொடர்பான, சத்தியக்கடதாசியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாகச் செயல்பட்டதாக எவ்பிஐ சிறப்பு முகவர் மெர்ரிலி ஆர். குட்வின் கூறியிருந்தார்.
இதுபற்றி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில்,
சிறிலங்கா அதிகாரிகளுடனோ அல்லது முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் திருச்சபையுடனோ, முறையான ஆலோசனை இல்லாமல் எவ்பிஐ எவ்வாறு அத்தகைய முடிவை எட்டியது என்று கேள்வி எழுப்பினார்.
பல ஆணைக்குழு அறிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா ஆகியோரின் அறிக்கைகள் மற்றும் சனல் 4 மற்றும் பிற ஆதாரங்கள் வெளியிட்ட வெளிப்பாடுகள், சஹ்ரான் தனியாக செயல்படவில்லை என்பதையும், தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.
கூடுதலாக, எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. இதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, சஹ்ரானின் பின்னால் வேறு யாரோ இருப்பது மிகவும் தெளிவாகிறது என்றும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
எவ்பிஐயின் விசாரணை செயல்முறை குறித்தும் அவர் கவலைகளை எழுப்பியுள்ளார்.
அது எவ்வாறு நடத்தப்பட்டது, அவர்கள் சிறிலங்காவுக்கு விஜயம் செய்தபோது சந்தித்தவர்கள் யார், எந்த அடிப்படையில் அவர்கள் தங்கள் முடிவுக்கு வந்தார்கள் என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர்கள் எங்களிடம் ஒருபோதும் பேசவில்லை. அப்படியானால், அவர்கள் சொல்வதை எப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.