மேலும்

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ரணிலுக்கு அழுத்தம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து, இன்று பதவியேற்கிறார். அவர் அதிபராகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை நியமிப்பார்.

இந்தநிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு நேற்று நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனார்.

மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க, நவீன் திசநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக இணங்கவில்லை என்றும், புதிய அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றதும், அவருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து புதிய அதிபர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ரணில் பேச்சு நடத்தவுள்ளார்.

இதற்கிடையே, சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து, அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலர் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.

இதுவரை அமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பெரேரா, ஹரின் பெர்னான்டோ, மலிக் சமரவிக்ரம, மற்றும் இராஜாங்க  அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *