எம்சிசி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம் – அமெரிக்கா
சிறிலங்கா அரசாங்கத்துடன் கையெழுத்திடப்படும், மிலேனியம் சவால் உடன்பாட்டுக்கு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மிலேனியம் சவால் உடன்பாடு குறித்து பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பீதியூட்டும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, அமெரிக்க தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மிலேனிய சவால் உடன்பாட்டில், கைச்சாத்திட்டதும் சிறிலங்கா அரசாங்கம் அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்ப வேண்டும். இதுவே, அனைத்துலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
இதன்மூலம், உடன்பாடு குறித்து ஆராய்வதற்கான வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும்.
நாடாளுமன்றம் உடன்பாடு குறித்து ஆய்வு செய்யும் காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கம் உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்குமான காலஅவகாசம் கிடைக்கும்.
மிலேனியம் சவால் உடன்பாட்டின் மூலம், சிறிலங்காவில் 11மில்லியன் மக்கள் நேரடியாக பலன் பெறுவார்கள்” என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள, மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டு வரைவிலும், இந்த உடன்பாட்டுக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.