சிவாஜிலிங்கத்துக்கு பாதுகாப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிமொழி
தமக்குப் போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உறுதி அளித்துள்ளார் என்று அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தமக்கு ஆதரவு தரும் அனந்தி சசிதரனுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில், தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறு வல்வெட்டித்துறை மற்றும் வட்டுக்கோட்டை காவல் நிலையங்களுக்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.