மேலும்

பாடசாலைகள் ஆரம்பம் – 10 வீத மாணவர்களே வருகை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்காவில் நேற்று பாடசாலைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்ட போதும், மாணவர்கள் வருகை மிகக் குறைந்தளவே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று 10 வீதத்துக்கும் குறைவான மாணவர்களே பாடசாலைகளுக்கு வந்தனர் என்றும், அரசாங்கத்தின் பாதுகாப்பு உறுதிமொழிகளை நம்பி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோர் விரும்பவில்லை என்றும், ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று பாடசாலைகளில் ஒட்டுமொத்த மாணவர் வருகை 10 சதவீதமே இருந்தது என்று சிறிலங்கா ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

கிராமப் புற பாடசாலைகளில், 25 தொடக்கம் 30 வீதமான மாணவர்கள் வருகை தந்தனர். நகர்புற பாடசாலைகளுக்கு 1 தொடக்கம் 2 வீத மாணவர்களே வருகை தந்திருந்தனர். எனினும், முன்னணிப் பாடசாலைகளில் 1 வீத மாணவர்கள் கூட வருகை தரவில்லை.

கொழும்பில், 6000 மாணவர்கள் கல்வி கற்கும் ஆனந்தா கல்லூரியில் 34 மாணவர்களே வருகை தந்தனர். 8000 மாணவர்கள் கல்வி கற்கும் றோயல் கல்லூரியில் 302 மாணவர்களே வந்திருந்தனர்.

மேலும், நாலந்தா கல்லூரி- 40 மாணவர்களும், விசாகா வித்தியாலய- 50 மாணவர்களும், அனுலா – 50 மாணவர்களும், சிறிமாவோ பண்டாரநாயக்க – 43 மாணவர்களும், மகாநாம -23 மாணவர்களும், இசிப்பத்தான – 30 மாணவர்களும், பிரின்ஸ் ஒவ் வேல்ஸ்- 100 மாணவர்களும், தேவிபாலிகா- 20 மாணவர்களும், வருகை தந்திருந்தனர்.

பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும், பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியில், 32 மாணவர்களே வருகை தந்தனர்.

வடக்கில் உள்ள பாடசாலைகளில் 35 வீத மாணவர்கள் வருகை தந்திருந்தனர் என்றும், கிளிநொச்சி கல்வி வலயத்தில், 65 வீத மாணவர்கள் வருகை தந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *