சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 129 பேருக்கு மேல் பலி
சிறிலங்காவில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 129 வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 62 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
மட்டக்களப்பு -சீயோன் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டு,75 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மட்டு. போதனா மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில், கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்புகளில் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அங்கு சிதறிக்கிடப்பதாக, சம்பவ இடத்துக்குச் சென்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இன்றைய குண்டுவெடிப்புகளில் 129இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 370 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கொழும்பு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.