எந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி
போரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
வெலிகமவில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை.
எந்தவொரு போரிலுமே பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படும். அது கடினமான உண்மை. அது இல்லாமல் போரை நடத்த முடியாது.
அதற்காக, நாங்கள் போரின் போது அதனைச் செய்தோம் என்று அர்த்தமில்லை.
கடந்த காலத்தை தோண்டக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள நல்ல விடயங்களைப் பார்க்க வேண்டும்.
அனைத்துலக விசாரணை தேவையில்லை. எமது நீதித்துறைக்கு அதற்கான தகுதி உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.