மாலியில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான சிறிலங்கா இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலியின் மத்திய பகுதியில் ஐ.நா வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி ஒன்று சேதமடைந்தது.
இதில் பயணம் செய்த கப்டன் ஜெயவிக்ரம, கோப்ரல் விஜேகுமார ஆகியோர் பலியாகினர்.
இவர்களுக்கு ஐ.நா மூலம், தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும்.
உயிரிழந்த படையினரின் சடலங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்களில் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படும்.
படுகாயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஏனைய இரண்டு பேரும் சிறியளவிலான காயங்களுக்கே உள்ளாகியிருக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.