மேலும்

6 மாதங்களுக்கு முன்னரே மலேசியாவில் இருந்து திரும்பினார் நேவி சம்பத்

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நேவி சம்பத், மலேசியாவில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சி நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவரை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சன நிரஞ்சன சில்வா முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, இன்று வரை அவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிவான் மீண்டும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டார்.

லோட்டஸ் வீதியில் உள்ள தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றில் வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூன்றாவது பிரிவு பொறுப்பதிகாரியான ஆய்வாளர் நிசாந்த டி சில்வாவினால் நேற்றுமுன்தினம் நேவி சம்பத் கைது செய்யப்பட்டார்.

இவரை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், “மூத்த கடற்படை அதிகாரிகள் சிலரின் உதவியுடன், மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், வெளிநாட்டில் கைது செய்யப்படும் ஆபத்து இருந்த்தால், ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா திரும்பியதாகவும், நேவி சம்பத் விசாரணையில் தெரிவித்தார்” என்று நீதிவானிடம் கூறினர்.

சிறிலங்கா திரும்பிய அவர், பொல்வத்தகே கல்லகே அசோக என்ற பெயரில், போலியான தேசிய அடையாள அட்டையுடன், தொம்பே பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *