கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு : ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ – முடிவுகள்
காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.
இதற்கமைய நடாத்தப்பட்ட ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’. உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் போட்டியாகும்.
தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் – இசை – நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து ‘கணினித் தமிழாக’ புதிய பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டியாகும்.
நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து எட்டப்பட்ட முடிவுகள்.
நடுவர் குழு :
மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே)
போட்டியில் 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் 30 குறுநாவல்கள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகின. நடுவர்களது கூர்மையான முடிவுகளைத் தொகுத்து நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாபஐயர் அவர்களால் குறுநாவல்களின் தெரிவுப் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
குறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக 14 நாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
- பணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7
காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள் – 7
இவை அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும்.
# முதலாவது பரிசு :10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
- கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)
# இரண்டாவது பரிசு: 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
- மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)
# மூன்றாவது பரிசு: 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
- குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)
(திருத்தப்பட்ட பட்டியல் : 09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’ எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.)
# நான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
- நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா
- இனியும் விதி செய்வதோ… ! – மைதிலி தயாபரன் (இலங்கை)
- வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
- நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)
ஆறுதல் பரிசுக்கு நான்கு குறுநாவல்கள் தெரிவாகியுள்ளமையால் இந்தப் பரிசுத் தொகை தலா 1500 இந்திய ரூபாய்களாகத் நிர்ணயித்து இந்த நால்வருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
# காக்கை குழுமத்தின் தெரிவுக் குறுநாவல்கள் : ஓர் ஆண்டு காக்கைச் சந்தா மற்றும் சான்றிதழ் (ஏழு)
o மரணம் என்னும் தூது வந்தது – கலாபூஷணன் சோ. ராமேஸ்வரன் (கனடா)
o நில வெளியேற்றம் – அன்வர்ஷாஜீ (இந்தியா)
o வானவில் கனவுகள் – கிருத்திகா அய்யப்பன்
o மெல்பேர்ன் வெதர் – கே. எஸ். சுதாகர் (அவுஸ்திரேலியா)
o பரதாயணம் – மஹாரதி (இந்தியா)
o சிலுவை – வ. ஹேமலதா (சிங்கப்பூர்)
o பெயரற்றவனின் நாட்குறிப்பு – தங்கராசா செல்வகுமார் (இலங்கை)
பரிசு பெற்றவர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கிறது.
-காக்கை இதழ்க் குழுமம்
சென்னை 10.04.2018