சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகலை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை, தொடர்ந்து பதவியில் இருக்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர். இவர்களில் 6 அமைச்சர்களும் அடங்கியுள்ளனர்.
இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐதேக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
எனினும், தாம் பதவி விலகத் தயாராகவே இருந்தாலும், சிறிலங்கா அதிபரே தம்மிடம் அதனைக் கூற வேண்டும் என்று சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, தாம் நேற்றுக்காலை பதவி விலக முன்வந்த போதும், சிறிலங்கா அதிபர் அதனை ஏற்கவில்லை என்றும், தொடர்ந்து பதவியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், கூறினார்.