தெகிவளை-கல்கிசையைக் கைப்பற்றி தங்காலையில் ஏமாந்த மகிந்த அணி
ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவியை சிறிலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ள அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி முதல்வர் பதவியைப் பிடித்துள்ளது.
தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவிக்காக இன்று காலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சிறிலங்கா பொதுஜன முன்னணி நிறுத்திய நாவலகே ஸ்ரான்லி டயஸ் வெற்றி பெற்றார். அவருக்கு 23 வாக்குகள் கிடைத்தன.
ஐதேக நிறுத்திய முதல்வர் வேட்பாளர் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளே கிடைத்தன.
அதேவேளை பிரதி முதல்வர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி உடவத்தை 25 வாக்குகளைப் பெற்று தெரிவானார்.
இங்கு ஜேவிபி உறுப்பினர்கள் நால்வரும் வாக்களிக்கவில்லை.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் சிறிலங்கா பொதுஜன முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தது.
எனினும் இந்த நடத்தப்பட்ட முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் பதவிகளுக்கான வாக்கெடுப்பில், ஐதேக நிறுத்திய வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.