மேலும்

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

eagle-flag-usaஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

“மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1  தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவை நாம் வரவேற்கிறோம்.

இந்தப் பரிந்துரைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவு இருப்பது குறித்து மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும், மனித உரிமை மீறல்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களின் மீறல்கள், மத சிறுபான்மையினர் மீதான அண்மைய தாக்குதல்கள் குறித்த அறிக்கைகள் எம்மைக் கவலை கொள்ள வைக்கின்றன.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்குமாறும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்குமாறும், நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகள் பேரவையின் 30/1  தீர்மானம் மற்றும் அதனை மீள உறுதிப்படுத்திய 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறோம்.

சிறிலஙகா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பூகோள கால மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றங்களை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *