கண்டியில் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா இராணுவமும் களமிறக்கம்
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன.
சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டது.
காவல்துறையினால் உதவி கோரப்பட்டதை அடுத்து உடனடியாக சிறிலங்கா இராணுவத்தினரை அங்கு அனுப்பி வைத்ததாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
“திகண பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்படுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டது.
திகண பகுதியில் உள்ள சிங்கப் படைப்பிரிவின் முகாமில் இருந்து 200 படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏனைய 100 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்“” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வன்முறைகள் வெடித்துள்ள பகுதிகளில் 1000 சிறிலங்கா காவல்துறையினரும், 200 சிறப்பு அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.