மேலும்

அமெரிக்காவின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு – ஜெருசலேம் விவகாரத்தில் விடாப்பிடி

ranilஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில், பலஸ்தீனம் தொடர்பான சிறிலங்காவின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

இஸ்ரேலின் தலைநகராக ரெல் அவிவ் நகரையே சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அங்கிருந்து சிறிலங்கா தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

எனினும், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் மறுப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் இந்த நிலைப்பாடு அமெரிக்க தூதுவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக சிறிலங்கா அரசின் அமைச்சர்கள், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக் குறித்து கீச்சகப் பதிவுகளை இடும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்கா பிரதமருடனான சந்திப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *