காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க சிறிலங்கா இராணுவம் இணக்கம்
மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கேசன்துறை – தொண்டைமானாறு இடையிலான வீதியை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் மீளத்திறந்து விடவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா இராணுவத் தளபதி, காங்கேசன்துறைக்கும் தொண்டைமானாற்றுக்கும் இடையில் உள்ள வீதி விரைவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வீதி மூடப்பட்ட நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வலிகாமம் வடக்கில் மயிலிட்டிச் சந்தியை அண்டிய பகுதியில் உள்ள தனியார் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கேப்பாப்பிலவில் 189 ஏக்கர் காணிகளை ஆறு வாரங்களுக்குள் விடுவிப்பதாகவும், சிறிலங்கா இராணுவத்தளபதி உறுதியளித்துள்ளார். இந்தக் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அமைப்பதற்கான மாற்று இடங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.