அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்
எம்மிடையே உள்ள காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு இந்தச் சித்திரைப் புத்தாண்டில் பாடுபட வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏவிளம்பி புத்தாண்டு இன்று பிறப்பதை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
‘ஆண்டுகள் பல கடந்து போனாலும் தமிழ் மக்களின் நிலை என்றுமே கேள்விக்குறியாகவே எஞ்சியுள்ளது.
உறவுகளைத் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், வீடுகள் மற்றும் காணிகளை இழந்தவர்களின் சோகத்தின் மத்தியில், வேலையற்ற பட்டதாரிகளின் ஏக்கப் பெருமூச்சின் மத்தியில் ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கிறது.
பிறக்கவிருக்கும் புத்தாண்டில் மக்களின் துன்ப துயரங்கள் அகழவும் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது உறவுகளுடன் இணைந்து கொள்ளவும் விவசாயிகள், மீனவர்கள், வணிகர்களின் தொழில் முயற்சி மேம்படவும் இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தப் புதிய ஆண்டில் எம்மிடையே உள்ள காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு பாடுபட வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சக்கூடிய வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து ஒரே சிந்தனையும் செயற்படுவதற்கு இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும், மன நிறைவையும் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.