சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு
சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவிலேயே இவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் யூ செங் ஷெங் 80 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனாவின் பல பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான பேச்சுக்கள் முடக்க நிலையை அடைந்துள்ளன. முதலில் 80 வீத பங்கு உரிமையை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு வழங்க சிறிலங்கா இணங்கியிருந்தது.
அதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 40 வீத பங்குகளை சிறிலங்கா எடுத்துக் கொள்ளும் என்று புதிய நிபந்தனையை விதித்துள்ளது. எனினும் இந்த திட்டத்துக்கு சீனா இணங்கவில்லை.
இதனால் ஏப்ரல் 7 அல்லது 8ஆம் நாள் கையெழுத்திடத் திட்டமிட்டிருந்த இந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை.
இரண்டு நாட்கள் யூ செங் ஷெங் சிறிலங்காவில் தங்கியிருந்த போதிலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்லவில்லை.
எவ்வாறாயினும், சீனாவின் ஒரு பாதை ஒரு அணை திட்டத்துக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் அவசியமானது என்பதால், சீனர்கள் காத்திருக்கவும், இணக்கிப் போகவும் விரும்புவதாக, யூ செங் ஷெங்கின் கருத்தில் இருந்து உணர முடிவதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.