நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதாக அவுஸ்ரேலியா வாக்குறுதி
சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்குத் தொடர்ந்து உதவு வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை அவுஸ்ரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சரான கொன்சீற்றா பியராவன்ரி –வெல்ஸ் நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைக்கும் தற்போது அவுஸ்ரேலியா அளித்து வரும் ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சரிடம், அவுஸ்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டில் இருந்து 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்கட்டுமான உதவியாக அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது.
வீடமைப்பு. உள்ளூர் உட்கட்டமைப்பு கட்டுமானம், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, மற்றும் பொருளாதார, வர்த்தக துறைகளில் அவுஸ்ரேலியா உதவி வருகிறது.