பென்ரகனில் சிறிலங்கா கடற்படைத் தளபதி – அமெரிக்கத் தளபதிகளுடன் கலந்துரையாடல்
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்ரகனுக்குச் சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அமெரிக்க படைத் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அமெரிக்க கடற்படையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வொசிங்டன் சென்றிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி, கடந்த 26ஆம் நாள் பென்ரகனுக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவர், ஆசியப் பிராந்தியத்துக்கான அரசியல் –இராணுவ விவகாரப் பிரதிப் பணிப்பாளரான விமானப்படை மேஜர் ஜெனரல் ஜோன் ரி குயின்டசைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அத்துடன், அமெரிக்க கடற்படையின் ஈரூடகப் படைப்பிரிவின் (மரைன்) மூலோபாய மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் மகோனி, நடவடிக்கை, திட்டங்கள் மற்றும் மூலோபாயங்களுக்கான கடல் நடவடிக்கை பிரதித் தலைவர் வைஸ் அட்மிரல் ஜோன் சி அகியூலினோ ஆகியோரையும் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பென்ரகனில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுக்களில், பயிற்சி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், கப்பல்களின் துறைமுக வருகைகள், சிறிலங்கா கடற்படையில் ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்குதல், மற்றும் பரஸ்பரம் ஈடுபாடுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.