மேலும்

ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

un-team-missing (1)காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா செயலணி  கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் நாள் தொடக்கம், 18 ஆம் நாள் வரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

சுமார் 16 ஆண்டுகளுக்குப்  பின்னரே ஐ.நாவின்  இந்த செயலணி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டது.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம், மனித உரிமைகளை பாதுகாக்கவும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும் நல்லாட்சியை ஏற்படுத்தவும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தலை நிலைநிறுத்தவும் நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் முன்னெடுக்கவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

அந்த வகையில் காணாமல்போனோர் குறித்த  ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இது நல்லிணக்க செயற்பாட்டில் ஒரு முக்கியமான அம்சமாக அமையுமெனவும்,  அனைத்து குடிமக்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாக அமையுமெனவும் சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது.

அந்த வகையில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐ.நா செயலணியுடன் தொடர்ச்சியாக, நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தன்னை அர்ப்பணிக்கிறது.

அத்துடன் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐ.நா செயலணி முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் விரிவான முறையில் ஆய்வு செய்து வருகிறது.

இதுதொடர்பாக, தொடர்ச்சியாக செயற்குழுவிற்கு எமது விடயங்களை அறிவிப்போம் என்றும், கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *