போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை ஐ.நா பொதுச்செயலர் உருவாக்கவுள்ளாராம்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்குவது தொடர்பான ஆவணங்கள் ஐ.நாவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘சிறிலங்காவுக்கு வந்து சென்ற பின்னர் அனைத்துலக அரங்கில், சிறிலங்காவை பான் கீ மூன் புகழ்கிறார். ஆனால் மறுபுறத்தில் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறார்.
இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்பவற்றை விசாரணை செய்வதற்கான நீதி சபையை பெயரிட்டு ஆவணப்படுத்தியுள்ளார் என ஐ.நாவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் மூன்று மாதங்களே உள்ள அவரது பதவிக் காலம் முடிவதற்குள் இந்த நீதி சபையை பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பான் கீ மூனின் பாராட்டுக்களின் பின்னணியில் ஆபத்துகளே நிறைந்துள்ளன.’ என்றும் அவர் கூறியுள்ளார்.