புனேயில் கைதான யாழ். இளைஞர் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டார்
போலி இந்தியக் கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்குச் செல்ல முயன்ற போது, புனே, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா என்ற தமிழர், கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார்.
பிராங்போர்ட் செல்ல முயன்ற போது, கடந்த 1ஆம் நாள், லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர் என்று விசாரணைகளில் தெரிய வந்ததாக, இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாடு, ஆலங்கொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்த மாரிமுத்து ராஜு என்பவரின் கடவுச்சீட்டில் தனது ஒளிப்படத்தை ஒட்டி, இவர் ஜேர்மனி செல்ல முயன்ற போது, ஐபி எனப்படும் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, விமான நிலைய காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம், திருநெல்வேலி கிழக்கைச் சேர்ந்தவர் என்பதை மும்பையில் சிறிலங்கா தூதரகம் உறுதிப்படுத்தியதுடன் அவருக்கு தற்காலிக கடவுச்சீட்டையும் பெற்றுக்கொடுத்தது.
இதையடுத்து வியாழக்கிழமை இரவு காவல்துறையினரால் மும்பை சகர் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சுதன் சுப்பையா, நேற்று அதிகாலை 3.10 மணியளவில், கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார்.