மகிந்தவுக்கு எதிராக மலேசியாவில் தொடர்கிறது போராட்டம்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மலேசியாவில் நேற்று இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தின் முன்பாக, 50இற்கும் அதிகமான தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள மகிந்த ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடுத்து வந்த மகிந்த ராஜபக்சவின் உருவபொம்மைகளை வீதியில் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நேற்றுமுன்தினமும், கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தின் முன்பாக, பெருமளவு தமிழர்கள், போர்க்குற்றவாளி மகிந்தவை, மலேசியாவை விட்டு வெளியேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.