“மகிந்தவே வெளியேறு” – மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, இன்று காலை கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலாலம்பூர், புத்ரா உலக வர்த்தக மையக் கட்டத்தில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் ஒன்பதாவது அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மலேசியா சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க புத்ரா உலக வர்த்தக மையத்துக்கு மகிந்த ராஜபக்ச வந்திருந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அங்கு குழுமிய பல்வேறு தமிழ் அமைப்புகளையும் சேர்ந்த 100இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், மகிந்த ராஜபக்சவே மலேசியாவை விட்ட வெளியேறு என்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகிந்தவுக்கு அளிக்கப்படும் அரச மரியாதைகளை நிறுத்தி விட்டு அவரை வெளியேற்ற வேண்டும் என்று மலேசியப் பிரதமரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியே மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்ட ஆர்ப்பாட்டக் காரர்கள், மலேசியாவில் அவர் எங்கு சென்றாலும், தேடிச் சென்ற அவர் தங்கியிருக்கும் விடுதியைத் தாக்குவோம் என்றும் எச்சரித்தனர்.
போராட்டக்காரர்கள், புத்ரா உலக வர்த்தக மையத்துக்குள் நுழைய முயன்ற போது, மலேசிய காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.