பிரித்தானியாவுக்கு மாற்றப்படுகிறார் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் அருண் சிங் ஓய்வு பெறவுள்ளதால், இந்திய வெளிவிவகாரச் சேவையில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
அருண் சிங் ஓய்வுபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதுவர் நவ்தேஜ் சர்னா, அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியை ஏற்றுக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பிரித்தானியாவுக்கான தூதுவராக வை.கே.சின்ஹா நியமிக்கப்பட்டால், சிறிலங்காவுக்கான தூதுவராக அடுத்து யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.