மேலும்

போரின் இறுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இடம்பெற்றன – பரணகம ஆணைக்குழு

maxwell_paranagama_commissionபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும் என்று காணாமற்போனோர் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைக்காக அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த மாதம் நிறைவடைந்தது.

இந்த ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை சில நாட்களுக்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட, போரின் இறுதிக்கட்டத்தில் அனைத்துலக மனித உரிமை, மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இடம்பெற்றதா என்று விசாரிக்கும் இரண்டாவது ஆணை தொடர்பாக, தமது இறுதி அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர்கள் விவகாரத்துக்குத் தீர்வு காண, சிறப்பு மேல் நீதிமன்றம் மற்றும் உண்மை ஆணைக்குழு ஆகியவற்றை அமைத்து, இருவழி உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றவியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் சந்தேகநபர்களை சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளும் சந்தேக நபர்களை உண்மை ஆணைக்குழு முன் நிறுத்தி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் மீது, உள்ளூர் விசாரணையாளர்கள், உள்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் மூலம் முற்றிலும் உள்ளக விசாரணையே நடத்தப்பட வேண்டும்.

குற்றத்தை ஒப்புக் கொள்பவர்கள் எத்தகைய சூழலில், குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று உண்மை ஆணைக்குழு முன்பாக விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொள்பவர்களுக்கு அபராத்துடன் பொதுமன்னிப்பு அளிக்கப்படும். அதேவேளை குற்றத்தை ஒப்புக் கொள்பவர்கள் படையினராக இருந்தால் அவர்களின் பதவி உயர்வுகள் நிறுத்தி வைக்கப்படும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச்சட்டங்களுக்கு முரணாக இருப்பதால்,  நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் நேரடித்தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும். என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும், குடும்பத்தினருக்கு ஆலோசனைத் திட்டங்களை வழங்கவும் இந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *