மனித உரிமை விவகாரங்களில் சிறிலங்கா அரசுக்கு முழு ஆர்வமில்லை – ஐ.நா நிபுணர் கருத்து
போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களை கையாளுவது ஊக்கமளிக்கும் சமிக்கையாகத் தென்படுகின்ற போதிலும், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
நீதிக்குப் புறம்பான, எதேச்சதிகார அல்லது பலவந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
“2015ல் வழங்கப்பட்ட ஆணையை சிறிலங்கா நிறைவேற்றும் போது அதுவே என்னைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒரு தருணமாக இருக்கும்.
என்னைப் பொறுத்தளவில் சிறிலங்காவில் நிலைமை முன்னேற்றகரமாக உள்ளது.
சிறிலங்காவில் பாரியளவில் படுகொலைகள், வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே இவை அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கமானது விசாரணை செய்து தீர்வு காண்பதில் ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
சிறிலங்கா பல்வேறு மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆரம்ப கட்டத்தில் தற்போது உள்ளது. இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் எவ்வாறு சிறிலங்காவில் கொண்டு செல்லப்படவுள்ளது என்பதை எவரும் அறியமாட்டார்கள்.
சிறிலங்கா தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்ற போதிலும் புதிய அரசாங்கம் முழு அளவில் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. குறிப்பாக சிறிலங்கா அரசு மீது இது முற்றிலும் அமுல்படுத்தப்படவில்லை.
எல்லா விவகாரங்களுக்கும் பொருத்தமில்லாத ஒரு முறைமையை சிறிலங்கா அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானதாகும். பொறுப்புக்கூறல் என்பது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மையமாக உள்ளது. ஆகவே முதலில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும்.
பொறுப்புக் கூறல் செயற்படுத்தப்படாதவிடத்து ஏனைய எந்தவொரு பிரச்சினைகளையும் நிறைவேற்ற முடியாது. பொறுப்பளித்தல் என்பது ஒருவரது வாழ்வுரிமைக்கு உத்தரவாதமளிக்கிறது.
எவ்வாறெனினும், சிறிலங்கா அரசாங்கம் என்னை அழைத்தால் தான் நிச்சயமாக சிறிலங்கா செல்வேன். இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி மிகவும் முக்கியமானது . இதனைத் நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
சிறிலங்கா சில கட்டளைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் என்னால் வழங்கப்பட்ட ஆணையை சிறிலங்கா இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும் சிறிலங்காவிற்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்கு அந்நாட்டு அரசாங்கம் என்னை அழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பாகும்.
அவர்கள் என்னை அழைத்தால் நான் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு உடனடியாக சிறிலங்காவுக்கு விரைந்து செல்வேன்.” என்றும் அவெர் குறிப்பிட்டுள்ளார்.