நாளை இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வு
மேகாலயா மாநிலத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் இரவு காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இறுதிநிகழ்வு, நாளை அவரது சொந்த இடமான இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது.
நாளை காலை 11 மணியளவில், இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள இறுதிநிகழ்வு, முற்றிலும் அரசாங்க நிகழ்வாக இடம்பெறும்.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், குறைந்தது ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த மாமேதை அப்துல் கலாமின் உடல், இன்று காலை 7 மணியளவில் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு எடுத்து வரப்படும்.
காலை 10 மணியளவில் மதுரையை வந்தடையும், அவரது உடல், அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் இராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு இன்று முழுவதும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாளை காலை இஸ்லாமிய மத முறைப்படி பிரார்த்தனைகள் இடம்பெற்ற பின்னர், நாளை காலை 11 மணியளவில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படும்.
முழு இராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு நாளை, தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாளாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.