தீவிர அரசியல் பரப்புரையாக மாறியுள்ள வெள்ளை வானும் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும்
போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானுடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி, மற்றும் அவரது மெய்க்காவலர்கள் மீரிஹானவில் பிடிபட்ட விவகாரம் சிறிலங்கா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரத்தை இரு கட்சிகளும் முக்கிய தேர்தல் பரப்புரையாக மாற்றியுள்ளன.
மீரிஹான பகுதியில் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் வதிவிடங்கள் உள்ள நிலையில், இது அவர்களை படுகொலை செய்யும் முயற்சி என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமல் வீரவன்ச, ஜி.எல்.பீரிஸ், கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர், இந்த வெள்ளை வான் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், ஐதேகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் வடக்கில் புலிகளால் பயன்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது என்றும், அதனை கோத்தாபய ராஜபக்சவே பாதுகாப்புச் செயலராக இருந்த போது இராணுவத்தில் இணைத்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.
பதிவு செய்யப்படாமல் இராணுவத்தினர் அதனைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்று வடக்கில் கைப்பற்றப்பட்ட 100இக்கு மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட படையினர் எவரும் கோத்தாபய ராஜபக்சவே இந்தக் கைத்துப்பாக்கியை வழங்கியதாக வாக்குமூலம் அளிக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.