தற்போதைய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது – மங்கள சமரவீர
சிறிலங்காவில் நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கு, தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியலமைப்பு ஒன்றே அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுடன் முகநூல் மூலம் நடத்திய உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, இந்த நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் பறங்கியர் அனைவரும் இலங்கையர்களாக வாழக் கூடிய, இலங்கையர்கள் எனும் அடையாளத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்.
சிறுபான்மையினரும் நாட்டில் ஆட்சி அமைப்பில் சில முடிவுகளை எடுக்கக் கூடிய வகையிலும் அவர்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலும் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அத்தகைய அரசியலமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அனைத்து இனத்தவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக அந்த தீர்வு அமைந்திருக்க வேண்டும்.
அவ்வாறான சூழலில் பல்லினத் தன்மையுடன் அனவரும் தாங்கள் இலங்கையர் என்பதை உணர்ந்து பெருமையுடன் வாழமுடியும்” என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.