குற்றப் பின்னணியால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் – களத்தில் இறங்கிய 3 முதலமைச்சர்கள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் மீறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிலருக்கு வாய்ப்பளித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு, குருநாகல மாவட்டத்திலும், அம்பாந்தோட்டையில் ஐதேகவினரை துப்பாக்கியுடன் விரட்டிச் சென்று விட்டு பின்னர் அது விளையாட்டுத் துப்பாக்கி என்று குத்துக்கரணம் அடித்த அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் பெர்னான்டோ ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்றனர்.
அதேவேளை, ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துமிந்த சில்வா, சஜின்வாஸ் குணவர்த்தன, சரண குணவர்த்தன, மேர்வின் சில்வா ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.
அதேவேளை, சரண குணவர்த்தனவுக்குப் பதிலாக அவரது மனைவிக்கு கம்பகா மாவட்டத்தில் போட்டியிட இடமளித்திருக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
சஜின் வாஸ் குணவர்த்தன சுயேச்சையிலும் இல்லை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்படாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, காலி மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவரது சார்பில் எந்த சுயேச்சைக்குழுவும் காலி மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தப்படவில்லை.
காலி மாவட்டத்தில், 14 அரசியல்கட்சிகள், 3 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிடும் 221 வேட்பாளர்களில் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பெயர் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
3 மாகாணங்களின் முதலமைச்சர்கள் போட்டி
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று மாகாணங்களின் முதலமைச்சர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பகா மாவட்டத்திலும், வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர குருநாகல மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.