இறுதிக்கட்டத்தை எட்டியது சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி – படங்கள்
சீன ஆயுதக் காவல் படையின் கொமாண்டோக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படைகளுடன் இணைந்து நடத்தி வரும் ‘பட்டுப்பாதை-2015’ கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் நாள் புத்தலவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் திறன் விருத்தி நிலைய மைதானத்தில் இந்தக் கூட்டுப் பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக இடம்பெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் முதற்கட்டம், கொமாண்டோ படைப்பிரிவின் ஊவா குடாஓயா பயிற்சி பாடசாலையிலும், இரண்டாம் கட்டப் பயிற்சி கணேமுல்லவில் உள்ள கொமாண்டோ படைப்பிரிவு தலைமையகத்திலும் இடம்பெற்றன.
தற்போது மூன்றாவது கட்டப் பயிற்சி மாதுருஓயா சிறப்புப் படைப்பிரிவு பயிற்சிப் பாடசாலையில் கடந்த 5ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாளுடன் இந்தக் கூட்டுப் பயிற்சி நிறைவடையவுள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சியில், சீன ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த லெப்.கேணல் கியூய் கியாங் தலைமையில், 43 பேரும் கொமாண்டோக்களும், சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்கள், மற்றும் சிறப்புப்படையினர் 43 பேரும் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் முதற்கட்டம், சீனாவில் கடந்த மார்ச் 29ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 17ஆம் நாள் வரை இடம்பெற்றது.
சீன ஆயுதக்காவல் படையினர் சீனாவுக்கு வெளியே மேற்கொள்ளும் முதல் கூட்டுப் போர்ப்பயிற்சி இதுவாகும்.