தேசியப்பட்டியலில் இடம்பிடிக்க முனையும் மகிந்த அணியினருக்கு ஆப்பு வைக்கிறார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சந்திரிகா குமாரதுங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்வைத்துள்ள யோசனையால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களான ஜி.எல்.பீரிஸ், அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜெயந்த், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா உள்ளிட்ட பலரும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானோர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்களாவர்.
இந்தநிலையில், தேசியப்பட்டியலில் இவர்களுக்கு இடமளிப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தேசியப் பட்டியலில் புலமையாளர்களும், நிபுணர்களும் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளதால், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது நாடாளுமன்றத்தில் மகிந்த ஆதரவு அணியினர் பலம்பெறுவதை தடுப்பதற்கான முயற்சி என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், தேசியப் பட்டியல் ஆசனங்கள் உருவாக்கப்பட்டதே, புலமையாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத் தான் என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் மைத்திரி தரப்பினால் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.