மகிந்தவின் அடுத்த நகர்வு – ஓரிரு மணிநேரத்தில் அறிவிப்பு வெளியாகிறது
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, மகிந்த ராஜபக்ச தரப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்கள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார்கள் என்றும் ரொகான் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட இடமளிக்கப்படாது என்று உறுதியாகிவிட்ட நிலையில், தனியான அணியொன்றை உருவாக்கி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நேற்றிரவு முழுவதும், மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளர்கள் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, தினேஸ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியில்- வண்டிச்சக்கரம் சின்னத்தில்- போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும், மக்கள் ஐக்கிய முன்னணியின் வண்டிச்சக்கரம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.