மேலும்

சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது தொடரப்பட்டுள்ள மௌனப் போர் – அமெரிக்க ஆய்வு அறிக்கை

sri-lanka-armyசிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், அங்கு மௌனமான போர் ஒன்று தொடர்ந்து கொண்டிருப்பதாக, கலிபோர்னியாவை தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லண்ட் நிறுவகம் (Oakland Institute) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போரின் நீண்ட நிழல்’ என்ற தலைப்பில், ‘சிறிலங்கா -போரின் பின்னரான நீதிக்கான பாடுகள்’ என்ற உபதலைப்புடன் வெளியாகி இருக்கும் இந்த அறிக்கையில்-

தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுதந்திரமான ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இராணுவப் பிரசன்னத்துக்கு அவர்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதுடன், பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் புறந்தள்ளலுக்கும் உள்ளாகிறார்கள்.

இது இன்னொரு வகை மௌனப் போர் ஆகும்.

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்துள்ள போதிலும் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் 160,000 இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

அங்கு வாழும் தமிழ் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பார்த்தால் ஆறு தமிழருக்கு ஒரு இராணுவத்தினர் என்ற வகையில் இது அமைந்திருக்கிறது.

மக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் இராணுவத்தினர் பெருமெடுப்பிலான கட்டுமானப் பணிகளிலும், உல்லாச விடுதிகள் அமைப்பது உள்ளிட்ட வியாபாரப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.

நிலம் இழந்த மக்கள் இடப்பெயர்வு வாழ்வில் தவிக்கிறார்கள்.

ஒரு சில பௌத்தர்களே இருக்கக் கூடிய தமிழர் வாழ்விடங்களில் போர் வெற்றிச் சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் அரச அனுசரணையோடு அமைப்பதன் மூலம் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வரலாறு ஆகியன திட்டமிட்ட வகையில் நசுக்கப்படுகிறது.

இதுவும் மௌனப் போரின் ஒரு அறிகுறியே.

அரச படையினராலும், பிரிவினை கோரிய தீவிரவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் எடுத்த முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசு ஒத்துழைக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதியான அரசாங்க மாற்றத்தின் பின்னர் புதிய அதிபராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன இப்பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் அரசியல் ஆளுமை கொண்டவரா என்ற கேள்வியும் உள்ளது.

பல தீவிர மனித உரிமை மீறல்களை இறுதிப்போரில் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் 57வது டிவிசனை வழி நடத்திய மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு இராணுவத்தின் உயர் பதவிகளில் ஒன்றான, இராணுவத் தலைமை அதிகாரி பதவியை வழங்கி இருப்பதானது, புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகளை பொறுப்போடும் ஜனநாயக வழியிலும் நடத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா அரசு மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கிறது.

இலங்கை அதன் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் பலவந்த குடியேற்றங்களை நிறுத்தவும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டவற்றை மீளப்பெறுவதற்கும், குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நியாயப்படி நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும்.

அரசியல் நாடகங்களை நிறுத்தி சர்வதேச சமூகம் சிறிலங்கா சிறுபான்மையினருக்கு மனித மற்றும் நில உரிமைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்துலக சமூகத்தின் பொறுப்பாகும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மனித உரிமைகள் மற்றும் காணி விவகாரங்களில் அனைத்துலக நிபுணத்துவம் பெற்ற அனுருத்த மிட்டல் மற்றும், ஓக்லண்ட் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோரால், 2014 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், களப் பணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான நேர்காணல்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவே சிறிலங்காவில் போர் முடிவுக்குப் பின்னர், சுதந்திரமாக நடத்தப்பட்டுள்ள முதலாவது ஆய்வாக அமைந்துள்ளது.

அறிவு சார்ந்ததாக அமைந்த இந்த விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *