நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர் – பிரதமர் ரணில் மீது அதிருப்தி
சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியால் பதவி விலகினர்.
டிலான் பெரேரா, சி.பி.இரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகிய நான்கு அமைச்சர்களுமே இன்று காலையில் தமது பதவி விலகல் கடிதங்களை சிறிலங்கா அதிபரிடம் கையளித்துள்ளனர்.
இவர்கள் அண்மையில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்தவர்களாவர்.
பதவி விலகிய பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை ஆட்சி செய்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், ரணில் விக்கிரமசிங்க பழிவாங்கும் வகையில் காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இன்று பதவி விலகிய அமைச்சர்கள் நால்வரும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.