போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமனம்
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
தற்போது, முல்லைத்தீவு படைத் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் அவர், சிறிலங்கா இராணுவத்தின் 46வது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த மே 07ம் நாள் ஓய்வு பெற்ற நிலையில், இவர் இந்தப் பதவிக்கு அதே நாளில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இது சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியாகும்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரின் போது, 57வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர்.
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்று அனைத்துலக அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படை அதிகாரிகளில் இவரும் ஒருவராவார்.
போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரை சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவிக்கு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.