பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் – வெலிக்கடைக்கு அனுப்பினார் நீதிவான்
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் மே 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்சவுக்கு, இன்று வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை கடுவெல நீதிமன்றத்துக்கு நோயாளர் காவு வண்டியில் பசில் ராஜபக்ச அழைத்து வரப்பட்டார்.
அப்போது காவல்துறைத் தரப்பில், பசில் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரை எதிர்வரும் 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பசில் ராஜபக்ச மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.