கொழும்பில் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் – புதிய அரசுடன் உறவை வலுப்படுத்த முயற்சி
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஆட்கடத்தல்களைத் தடுத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்காக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டன் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் வருவதை தடுப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தவே அவர் கொழும்பு வந்துள்ளார்.
இன்று அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
படகுகள் மூலம் அகதிகள் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதை தடுப்பது குறித்தே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுக்களில் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சருடன், அவுஸ்ரேலிய கடற்படை உயர் அதிகாரிகள் இருவரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்துடன், அகதிகளைத் தடுப்பது தொடர்பாக அவுஸ்ரேலியா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியிருந்தது.
அதற்காக சிறிலங்கா கடற்படைக்கு ரோந்துக் கப்பல்களையும் அவுஸ்ரேலியா வழங்கியிருந்தது.
அத்துடன், சிறிலங்காவின் ஒத்துழைப்புக்குப் பிரதி உபகாரமாக, அனைத்துலக அரங்கில் மனித உரிமை விவகாரங்களில் சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்காத நழுவல் கொள்கையையும் அவுஸ்ரேலியா கடைப்பிடித்து வந்தது.
கடந்த ஜனவரி மாதம், சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது, அதிர்ச்சியடைந்த நாடுகளில் அவுஸ்ரேலியாவும் ஒன்றாகும்.
இந்தநிலையிலேயே புதிய அரசாங்கத்துடன், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.