மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் 8 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் நேற்று எட்டு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அழைப்பின் பேரில், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நேற்றுக்காலை, 9 மணியளவில் விசாரணைக்கு முன்னிலையானார். மாலை 5.30 மணியளவிலேயே விசாரணைகள் முடிந்து வெளியேறிச் சென்றார்.
மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், எட்டு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
தேசிய புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த போது, தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பல்வேறு நபர்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில் முறைகேடான முறையில் வைப்பிலிடப்பட்ட பணம் தொடர்பாகவே, மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த கொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தனியான விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.